Sep 28, 2010

இணக்க சபைக்கு கூடுதல் அதிகாரம்; ரூ. 2 1/2 இலட்சம் வரையான பிணக்குகளை விசாரிக்க முடியும்

இணக்கச் சபைகளின் ஊடாக இரண்டரை இலட்சம் ரூபா வரையிலான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்து தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

இது விடயமாக நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணக்கச் சபைகளின் மூலம் இதுவரை காலம் 25 ஆயிரம் ரூபா வரை சம்பந்தப்பட்ட பிணக்குகள் மாத்திரமே விசாரணை செய்யப்பட்டன.

தற்போது இணக்க சபைகளின் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. முறைப்பாட்டாளரும், பிரதிவாதியும் தமது சார்பில் இணக்க சபைக்கு ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய முடியும்.

பிரதேச செயலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள இணக்க சபைத் தலைவர்களில் ஒருவரைத் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்த மூவரின் தலைமையில் பிரச்சினை விசாரணை செய்யப்பட்டுத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். பொதுமக்கள் நீதிமன்றம் சென்று அலைக்கழிவதைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.இதற்கென இணக்க சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்கென நீதி பிரதியமைச்சர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நேற்று (27) காலை நீதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. நீதியமைச்சின் செயலாளர் சுகத கம்லத், இணக்க சபை ஆணைக் குழுவின் மேலதிகச் செயலாளர் திருமதி கமலினி சில்வா, பதில் செயலாளர் அரந்தர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment