Sep 15, 2010

அபிவிருத்தியில் சகல இனங்களுக்கும் வாய்ப்பு; பயங்கரவாதம் எதிர்காலத்தில் தலைதூக்காது கிளிநொச்சி அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் நாமல் ராஜபக

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமான வகையில் பயன் பெறும் துரித அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒருபோதும் தலைகாட்ட முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சியில் கூறினார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் கிளிநொச்சி பிரதேச மக்களின் சுக துக்கங்கள் மற்றும் எதிர்கால தேவைகளைக் கண்டறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (13) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (13) காலை கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள டிரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியதுடன் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்தனர். அதனையடுத்து கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களைச் சீரமைக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்மடுவில் உள்ள வில்லுக்குளத்தில் இடம்பெற்றது. அங்கு பிரதேசத்தின் இளைஞர் சங்கங்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற சிரமதான நிகழ்வுகளில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

அன்று யுத்தத்துக்கும் துப்பாக்கிக்கும் பழகிப்போன இளைஞர்களை இன்று தொழில் பயிற்சிகளுக்கு பயிற்றுவிக்க முடிகிறது. இதனால் நாட்டுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் அபிவிருத்தி கிடைக்கிறது. பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அல்லது இடை நடுவில் கைவிட்ட இப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் அவர்கள் மிகவும் விரும்பும், மற்றும் திறமை காட்டும் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான ஆரம்ப பயிற்சியை வழங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

பயங்கரவாதம் இந்த நாட்டுக்கு இல்லாமற் செய்தவற்றை திரும்பப் பெற இந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளையும் சிறுவர்களுக்கு கல்வியையும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில்களையும் உருவாக்கிக் கொடுப்பது அவசியமாகும். இதற்கான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களின் குறைபாடுகள் மற்றும் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக முன்னேற்றக் கூட்டத்தை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு மாதமும் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ எம். பி. குறிப்பிட்டார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகே உரையாற்றும்போது இளைஞர் யுவதிகளிடம் உள்ள உண்மையான திறமைகளை கண்டறிந்து அவற்றை வளர்ப்பதற்கு உதவுவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார, ஸ்ரீரங்கா, உதித லொக்குபண்டார, கணகஹேரத், செஹான் சேமசிங்க மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment