Sep 11, 2010

அமெரிக்காவில் பயங்கர தீவிபத்து: ஒருவர் பலி

சான் புருனோவில் இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் தீப்பற்றியும் எரியும் வீடுகள்.
சான் பிரான்சிஸ்கோ, செப்.10: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வியாழக்கிழமை எரிவாயு குழாய் வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.

இங்குள்ள சான் புருனோ நகரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் அருகில் உள்ள வீடுகளுக்கு பெரிய குழாய் மூலம் இயற்கை எரிவாயு செல்கிறது. இந்தக் குழாய் வியாழக்கிழமை வெடித்தது.

இதனால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீடுகள் தீக்கிரையாகின. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சான் புருனோவில் உள்ள மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்குள்ளான பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்தது.

எரிவாயு குழாய் வெடித்த சமயத்தில் அரை மைல் தூரத்தில் விமானம் ஒன்று தாழ்வாக பறப்பது போன்ற சத்தம் கேட்டது என்று அப்பகுதியைச் சேர்ந்த டினா டிலோயா தெரிவித்தார்.

20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வேகமாக தீ பரவியது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், ரசாயனப் பொடிகளை பயன்படுத்தியும் தீ அணைக்கப்பட்டது.

45 வீடுகள் தீ விபத்துக்குள்ளானதாக உள்ளூர் பத்திரிகைககள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் மிக அருகில் நிகழ்ந்துள்ளது. 2001 செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க்கின் இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.

அதன் 9-வது நினைவுதினம் வரும் 11-ம் தேதி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இதுவரை அதுதொடர்பான தகவல் எதுவும் தெரியவரவில்லை.

No comments:

Post a Comment