Oct 24, 2010

142 இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் சிறையில் உள்ள 142 இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததான குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களில் அந்நாட்டு கடலோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்த மீனவர்கள் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கராச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மீனவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த நீதிமன்றம் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை சிந்து மாகாண உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. இனி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் இந்திய அரசுக்கு தாங்கள் மீனவர்களை விடுவிக்க உள்ளது குறித்து தெரிவிப்பார்கள்.

பின்னர் அவர்கள் இந்திய மீனவர்கள்தானா என்பது இந்திய அரசு மூலம் உறுதி செய்யப்படும். அதன் பின் மீனவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுவர்.

முன்னதாக கராச்சி சிறையில் இருந்த 442 இந்திய மீனவர்கள் அண்மையில் தாய்நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானில் உள்ள இரு தொண்டு நிறுவனங்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தந்தன.

No comments:

Post a Comment