Oct 16, 2010

அ.தி.மு.க.39-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் அமைப்போம்- ஜெயலலிதா அறிக்கை





அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உழைப்பால் உயர்ந்தவரும், மக்களைக் கவரும் காந்த சக்தி படைத்தவரும், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனியும், தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் நாயகனாக தொடர்ந்து விளங்குபவருமான, “மக்கள் திலகம்‘

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஓங்கு புகழ் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனது 38 வருட வெற்றிப் பயணத்தை நிறைவு செய்து, 17.10.2010 அன்று அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறது.


இந்த நன்னாளில், கழகம் கடந்து வந்த வெற்றிப்பாதைகளின் பெருமிதங்களையும், எதிர்கொண்டு இடர் சாய்த்த பெருமைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.


அதே வேளையில், நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைத்திட்ட செயல் மறவர்களையும், இயக்கப் பணிகளின் போது உயிர் நீத்திட்ட உத்தமத்தொண்டர்களின் தியாகங்களையும் நம் நெஞ்சில் நினைவுறுத்துவதோடு, கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனை வருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்த நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

கழகம் பிறந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தன் முதல் வெற்றியை பெற்றது. எக்குக் கோட்டையாய் கழகத்தைக் கட்டிக்காத்து வந்த நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கழகத்தின் கொள்கை- கோட்பாடுகளை பட்டி தொட்டியெங்கும் பரப்புவதற்காக என்னை 1983-ல் அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளராக்கி மாநிலம் முழுவதும் வலம் வர வைத்தார்.

இவ்வேளையில், 1984-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, பொதுத்தேர்தல் வந்தது. நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். களத்தில் இல்லாத நேரத்தில் நடந்த ஒரு உக்கிரமான போரில், எதிரிகளிடமிருந்து கழகத்தை சேதாரமில்லாமல் கட்டிக்காத்து அவரிடம் ஒப்படைக்கும் பெரும் வாய்ப்பினை உங்கள் அன்புச்சகோதரியாகிய நான் பெற்றேன்.

புரட்சித் தலைவர் நலமாக இருப்பதாகவும், அவர் படுக்கையில் இருந்தபடியே வெற்றி பெற்று, உங்கள் திருமுகம் பார்ப்பதற்கு விரைவில் தமிழகம் திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையூட்டும் பிரச்சாரத்தையும் தமிழகம் முழுவதும் நான் செய்து வந்ததின் விளைவாக, பொய்ப்பிரசாரம் முறியடிக்கப்பட்டு, அ.தி.மு.க. அமோக வெற்றியை ஈட்டியது.

கழகக் கண்மணிகளாகிய உங்களின் உறுதுணையாலும், ஓய்வில்லாத உழைப்பாலும், இடைவிடாத போராட்டங்களாலும், 1989-ல் பிளவுற்றுக் கிடந்த கழகத்தை ஒன்றுபடுத்தி, இழந்த “இரட்டை இலை” சின்னத்தை மீட்டு, பூட்டப்பட்ட கட்சி அலுவலகத்தையும் திறந்து, புதிய மறுமலர்ச்சியை கழகத்திற்கு ஊட்டியதன் விளைவாக, மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அன்றைய ஆளும் கட்சியான திமுகவை அபாரமாய் தோற்கடித்து மீண்டும் அ.தி.மு.க.வை வெற்றிப்பாதைக்கு நான் அழைத்து வந்ததை நீங்கள் அறிவீர்கள்.

1991ல் எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அ.தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை வழங்கும் பொருட்டு, அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைத்தது; உலகம் போற்றும் அன்னை தெரசாவே மனம் திறந்து பாராட்டும் வண்ணம் தொட்டில் குழந்தைகள் திட்டத்தை செயல்படுத்தியது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தி வைத்திருந்தது, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு சட்டப்பாதுகாப்பு கொடுத்தது; எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது. 1996-ல் நம் கழகம் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை உருவானது.

ஆனாலும், மனம் தளர்ந்துவிடாது, செயல் சோர்ந்துபோகாது, தொண்டர்களை தட்டிக்கொடுத்து, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தொண்டர்களுக்கு ஊட்டி, அதன் மூலம் மீண்டும் கழகத்தை எழுச்சிப்பாதைக்குள் கொண்டு வந்து, 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பெரும் வெற்றிகளை நான் குவிக்கச் செய்தேன்.

2001 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், நமது மாசற்ற மக்கள் இயக்கம் எனது தலைமையிலான அ.தி.மு.க.வின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச்செய்தது. தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு எண்ணற்ற புரட்சிகர திட்டங்களை தமிழகத்திற்கு தந்தோம்.

மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை தரக்கூடிய வலிமையும், வல்லமையும் கொண்ட ஒரே அரசியல் பேரியக்கம் அ.தி.மு.க. தான் என்பதில் எள் முனையளவும் ஐயமில்லை. எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பின் எத்தனையோ இன்னல்களையும், இடர்பாடுகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டு இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் வெற்றியை நோக்கி என்னால் அழைத்துச் செல்ல முடிகிறது என்றால், அதற்கான ஊக்க சக்தியாக இருப்பது உத்தமத் தொண்டர்களாகிய உங்களின் கள்ளமில்லா அன்பும், கடமை உணர்வோடு கூடிய ஒத்துழைப்பும், என் மீது எந்நாளும் நீங்கள் கொண்டிருக்கும் மாசற்ற பற்றும் தான்.

அ.தி.மு.க.வின் 39ஆவது ஆண்டு தொடக்க விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆங்காங்கே நம் வெற்றியைத் தாங்கி நிற்கும் கழகக் கொடிக்கம்பங்களுக்கு வண்ணங்கள் பூசி விழாக்கோலம் கண்டு, இனிப்புகள் வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து மக்கள் பணியாற்றுங்கள்; ஒரு பொன்னான எதிர்காலம் நமக்காக காத்திருக்கிறது. 2011-ல் அமையப்போகும் புதிய அரசிற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் உருவாக்கிட இந்நாளில் நாம் அனைவரும் சபதமேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment