Oct 13, 2010

சாலை விபத்துகளும் குறைய வேண்டும்; இளைஞர்கள் 8-வது வரையாவது படிக்க வேண்டுமே என்று தான் சட்டதிருத்தம் ஜெயலலிதாவின் போராட்ட அறிவிப்புக்கு கருணாநிதி பதில




முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு நாளும் பகல் 1 மணி அளவில் தலைமைச் செயலகத்திலிருந்து, பணியாற்றிய களைப்புடன் வீடு திரும்பி உணவருந்திட உட்காரும்போதுதான்; எதிரே உள்ள தொலைக்காட்சியில், நெஞ்சைக் குலுக்கும் நிகழ்வுகளும், செய்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போகும். அவற்றைப் பார்க்கும்போது உணவருந்தவே மனம் இடம்தராது. எத்தனையோ முறை உணவு பரிமாறப்பட்டிருக்கிற தட்டினை அப்படியே வைத்துவிட்டு, கை கழுவிவிட்டு; அடுத்த அலுவல்களுக்கு சென்றிருக்கிறேன். இந்த நிலை ஒரு நாள் இரு நாள் அல்ல; ஏறத்தாழ ஒவ்வொரு நாளுமே உள்ளத்தைச் சுட்டெரிக்கும் அந்தக் காட்சிகள் வரத் தவறியதில்லை.

திருப்பதிக்குச் சென்று திரும்பிய வழியில் வேன் கவிழ்ந்து, குழந்தைகள் உள்பட குடும்பத்தார் அனைவரும் பலி என்ற செய்தியும்; பலியான குழந்தைகளை, பதறித் துடித்தவாறும், கதறி அழுதவாறும் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டு, துக்கத்தை வெளிப்படுத்தும் அந்தத் துயர நிகழ்ச்சிகளும், அந்த நாள் முழுதும் எனது இதயத்தை அலைக்கழிக்கச் செய்யத் தவறியதே இல்லை.

திருமணம் முடிந்து வருகிற வழியில் காரில் வந்த மணமக்கள் லாரியுடன் மோதிய விபத்தில் மாண்டு போனார்கள் என்ற செய்தி என்னை செந்தீயாகச் சுட்ட நாட்கள் எத்தனையோ உண்டு. விழாவுக்குச் சென்றவர்கள், காரோட்டியின் அஜாக்கிரதையால், சாலையில் அடையாளத்தைப் பார்க்கத் தவறி, வேறு வழியில் திரும்பி, குடும்பத்தோடு குடைசாய்ந்து, ஒருவர்கூட பிழைக்காமல் பலியான பரிதாபம்.

இப்படி ஒவ்வொரு நாளும் உள்ளத்தை உலுக்குகின்ற விபத்துகள் - நெஞ்சைப் பிழியும் கோரச் சாவுகள் - பச்சிளங்குழந்தைகளின் பிணக்குவியல்கள் - இந்த விபத்துகள் குறைய வழியே இல்லையா? என்று நம் போன்றோர்க்கு ஏற்பட்ட பெருமூச்சின் விளைவாகத்தான்; வாகனங்களை ஓட்டிவரும் ஓட்டுநர்களுக்குப் படிப்பறிவு அவசியம் என்று கருதி, மத்திய அரசு அறிவார்ந்த விதிமுறை ஒன்றை வகுத்தது. அதன்படி, 8-வது வகுப்பு வரையிலாவது ஓட்டுநர்கள் படித்திருக்க வேண்டும் என்றொரு நியதி வகுத்து, அதனை ஆணையாகவும் ஆக்கியது.

அந்த ஆணையை நிறைவேற்றும் வகையில், மாநில அரசுகள் செயல்படத் தொடங்கிய காரணத்தால், வரவர வாகனங்களின் எண்ணிக்கை சாலைகளில் அதிகமாகிக் கொண்டே வந்தால்கூட, விபத்துகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்து கொண்டே வருவதைக் காண்கிறோம். மேலும் அது குறைய வேண்டும்; விபத்துகளால் ஏற்படும் திடீர்ச் சாவுகள் காரணமாக உருவாகும் குமுறல், கொந்தளிப்பு குறைய வேண்டுமென்று நம்மைப் போன்றவர்கள் சிலர் எண்ணுகிற நேரத்தில்; எப்படியோ ஒரு வேலைக்குப் போகிற இளைஞனுக்கு எட்டாவது வரையிலாவது படிக்க வேண்டுமென்ற ஊக்கத்தை, மத்திய அரசின் இந்த ஆணை உருவாக்குகிறது என்பதில் ஓரளவு நிம்மதி.

ஆனால், எப்படியோ மத்திய அரசையோ, மாநில அரசையோ குற்றஞ்சாட்டி; இளைஞர்கள் எட்டாவது வரையிலாவது படித்து கல்வி அறிவு பெறுவதைத் தடுக்கும் வகையில்; அதை எதிர்க்கும் ஒரு போராட்டத்தை நடத்துகிறேன் என்கிறார்கள் ஒரு சிலர்! எல்லா ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்திப் பார்த்துக் களைத்துப் போனவர்களுக்கு, இந்தப் போராட்டமாவது கைகொடுக்குமா என்றுதான் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் கைதட்டி ரசித்து, வாழ்த்தொலி முழங்குவதற்கு வாயைப் பிளந்து கொண்டிருக்கிறார்கள்.

பணி வாய்ப்பும் தேவை; ஓரளவு படிப்பும் தேவை; என்று கருதி, மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் (கல்வியை வலியுறுத்தும்) - இந்தச் சாதாரண நிபந்தனையைக்கூட சகிக்க மாட்டோம் என்று சண்டமாருதம் போல் கிளம்புகின்றவர்கள் இப்படி ஏதாவது காரணம் கிடைக்காதா? என்று அலைந்து கொண்டிருந்தால்; நாடு வாழுமா, நல்லது நடக்குமா என்பதை நல்லோரே, நீவிர்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment