
காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை அழைத்தது அவர் இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்ததற்கு அளித்த பரிசு போல உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை ஒசூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் வருவாய்த் துறையினர் உதவியோடு வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. இதை காவல்துறையும் கண்டுகொள்வதில்லை. கோயில் நிலங்களும், அரசு புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
நெய்வேலியில் 20 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ள தாற்காலிகத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமைய்யா ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment