Oct 22, 2010

அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா மீண்டும் முயற்சி


தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வட கொரியா அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இத்துடன் வடகொரியா அணுகண்டு, ஏவுகணை போன்ற ஆயுதங்களை குவித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆயுதங்களை குவிக்கிறது.

வடகொரியா 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அடுத்து 2009-ம் ஆண்டு மேலும் அணுகுண்டு சோதனை நடத்தியது.

இதனால் ஐ.நா.சபை வடகொரியாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்காவும் பல்வேறு தடைகளை விதித்தது. இந்த நிலையில் மீண்டும் வடகொரியா அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியாவில் உள்ள புன்கயேரி என்ற இடத்தில் அணுகுண்டுகளை வைத்து உள்ளது. இந்த இடத்தில் சமீப காலமாக வாகன நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதை அமெரிக்க செயற்கை கோள் படம் பிடித்து உள்ளது.

அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யத்தான் அதிக அளவில் வாகனங்கள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே எந்த நேரத்திலும் அணுகுண்டு சோதனை நடக்கலாம் என தென்கொரியா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

சமீபத்தில் தென்கொரியாவின் போர்கப்பலை வடகொரியா ஏவுகணை வீசி தகர்த்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவியது. இந்த நிலையில் வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த இருப்பது மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment