Oct 14, 2010

வெவன்டன் தோட்ட மண்சரிவு அச்சுறுத்தல்: வெளியேறிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடு

கொத்மலை, வெவன்டன் தோட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி பிரதேச செயலாளர் ஊடாக தோட்ட நிர்வாகத்தினருடன் நடாத்திய பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

வெவன்டன் தோட்டத்திற்குச் செல்லும் பாதையிலும் அதனை அண்மித்த பிரதேசத்திலும் சுமார் நூறு மீட்டர் தூரத்திற்கு நிலத்தில் திடீரென நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இவ்வெடிப்பின் காரணமாக வீதியின் ஒரு பகுதியும் கீழிறங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலிய மாவட்ட இணைப்பாளர் கூறினார்.

இந்த வெடிப்பினால் தோன்றியுள்ள மண் சரிவு அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாழ்ந்த 29 குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டி. பி. ஜி. குமாரசிறி குறிப்பிட்டார்.

வெவன்டன் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இக் குடும்பங்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment