Oct 29, 2010

மும்பையில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடுகிறார் ஒபாமா



இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மும்பையில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளார்.

ஒபாமாவின் பயணத் திட்டம் குறித்து அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முதல் நாள்: நவம்பர் 6-ல் மும்பை வரும் ஒபாமா, தாஜ் ஹோட்டலில் தங்குகிறார். அங்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தெற்கு மும்பையில் மணி பவனில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு செல்கிறார்.

அமெரிக்க- ஆப்பிரிக்கர்களைக் கவர்ந்த மாமனிதர் மகாத்மா காந்தி. மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலருக்கு அவர் வழிகாட்டி. அதிபர் ஒபாமா, தனது தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் காந்தி அருங்காட்சியகத்துக்குச் செல்கிறார்.

பின்னர், மும்பையில் நடைபெறும் இந்திய- அமெரிக்க தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அன்றிரவு தாஜ் ஹோட்டலில் தங்குகிறார்.

இரண்டாம் நாள்: 7-ம் தேதி பகலில் மும்பையிலேயே தங்கியிருக்கும் அவர், அங்குள்ள பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடுகிறார். (பாதுகாப்பு காரணங்களுக்காக வாண வேடிக்கைகள் இருக்காது என்று கூறப்படுகிறது.)

பின்னர், டவுன்ஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அதைத் தொடர்ந்து இந்திய பிரதிநிதிகளைச் சந்திக்கும் அவர், விவசாயம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

தாஜ்மகாலுக்கு செல்லவில்லை: 7-ம் தேதி மாலை தில்லி செல்லும் அவர், ஹுமாயூன் நினைவிடத்தைப் பார்வையிடுகிறார். ஆனால், உலக அதிசயமான தாஜ்மகாலுக்கு செல்லமாட்டார். அடுத்தமுறை இந்தியா வரும்போது அவர் தாஜ்மகாலுக்கு செல்லக்கூடும்.

அன்றிரவு பிரதமர் மன்மோகன் சிங்- குருசரண் கௌர் அளிக்கும் விருந்தில் ஒபாமாவும் அவரது மனைவி மிசேலும் பங்கேற்கின்றனர்.

லண்டனில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் மன்மோகன் சிங்கை முதல்முறையாக ஒபாமா சந்தித்தார். அதன்பின்னர் இரு தலைவர்களும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். உலகின் மற்ற தலைவர்களைவிட இருவருக்கும் இடையே பொருளாதாரம் சார்ந்த தகவல் பரிமாற்றம் அதிகமாக உள்ளது. எனவே, மன்மோகன் சிங்குடன் விருந்தில் பங்கேற்பதில் ஒபாமா மிகவும் ஆர்வமாக உள்ளார்.

மூன்றாம் நாள்: 8-ம் தேதி காலையில் தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளிப்பர்.

பின்னர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஒபாமா உரையாற்றுகிறார். அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஒபாமா குறிப்பிட்டுப் பேசுவார்.

அன்று மாலையில் இந்திய குடியரசுத் தலைவரை அவர் சந்தித்துப் பேசுகிறார். இரவில் நடைபெறும் அரசு விருந்திலும் அவர் பங்கேற்கிறார் என்றார் அவர்.

தலைப்பாகை விவகாரம்: இந்திய பயணத்தின்போது அதிபர் ஒபாமாவின் அமிருதசரஸ் பொற்கோயில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய, அமெரிக்க ஊடகங்கள், பொற்கோயில் செல்லும்போது தலைப்பாகை அணிய வேண்டும் என்பதால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவில் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐந்தில் ஒருவர், ஒபாமாவை முஸ்லிமாக கருதுகிறார் என்று கூறப்படுள்ளது. பொற்கோயிலுக்கு செல்லும்போது தலைப்பாகை அணிந்தால் அமெரிக்கர்கள் அவரை முஸ்லிம் என முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயத்தால் பயணத் திட்டத்தை ஒபாமா ரத்து செய்து விட்டார் என்று செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் திட்டவட்டமாக மறுத்தார்.

வெளிநாட்டுப் பயணத்தின்போது மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கு அந்தந்த நாட்டு பாரம்பரிய வழக்கப்படியே ஒபாமா செல்கிறார். நேரக் குறைவு காரணமாகவே அமிருதசரஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment