Nov 24, 2010

அதிக வெப்பமாகும் ஏரிகள் : "நாசா' ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரிகள் சூடாகி வருவதாக "நாசா' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் "நாசா' மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஸ்நீடர், சைமன் ஹூக் ஆகியோர் செயற்கைக் கோள் அளித்த விவரங்களை வைத்து, உலகம் முழுவதும் உள்ள 167 பெரிய ஏரிகளை ஆய்வு செய்தனர். கடந்த 85ம் ஆண்டு முதல் ஏரிகளின் வெப்பநிலை குறித்து ஆய்வு செய்த போது, சில ஏரிகள் 1.8 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஏரிகள் அதிகம் வெப்பமடைந்து காணப்படுகின்றன. சைபீரியா, மங்கோலியா, வடக்கு சீனா பகுதிகளில் மிதமான வெப்பம் அதிகரித்துள்ளது. பூமி கோளத்துக்கு தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளில் அவ்வளவாக வெப்பம் உயரவில்லை. வடக்கு ஐரோப்பாவில் ஏரிகளை சுற்றியுள்ள காற்று பகுதியை விட, தண்ணீர் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது. ஏரிகளின் வெப்பம் அதிகரிப்பதால் பாசி அதிகம் படிந்து, மீன் இனம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment