
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆறாண்டு நிறைவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர்.
உறவுகளையும், உடன்பிறப்புகளையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் உறவுகளின் கல்லறைகளுக்கு தீபமேற்றி, மலர்த்தூவி நெஞ்சுருக நினைவு கூர்ந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது.
மத வழிபாடு களில் கலந்துகொண்ட மக்கள் ஆழிப் பேரலை அள்ளிச்சென்ற உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கியதுடன் தண்ணீர் பந்தல்களையும் நடத்தினர்.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளுக்கு அருகில் ஒன்று கூடிய உறவுகள், கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். கிழக்கின் கரையோர கிராமங்களில் நேற்றுக் காலை பெரும் சோகம் கெளவியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
தென் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலும் மக்கள் சோகமே உருவாக உறவுகளை நினைவுகூர்ந்தனர். உறவுகளின் பிரிவுத்துயரில் தோய்ந்த மக்கள் நீண்ட நேரம் ஓரிடத்தில் குழுமியிருந்து அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு 11 மாவட்டங்களில் சுனாமியின் சோக வடு நேற்று மீண்டும் மக்களை ஞாபகமூட்டிச் சென்றுள்ளது.
No comments:
Post a Comment