
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1986 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அவ்வழக்கு நடைபெறும் நான்காவது அமர்வு நீதிமன்றத்திடம் அது விடுத்துள்ள கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறுமாறு டக்ளஸ் தேவானந்தா கோரவேண்டும் என்றும், தவிரவும் முன் ஜாமீன் கோர உயர்நீதிமன்றத்தை அவர் அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.
ஒருவர் கொல்லப்பட்ட சூளைமேடு வழக்கு விசாரணையின்போது ஆஜராகாத தேவானந்தா தேடப்படும் குற்றவாளி என் 1990ஆம் ஆண்டில் அமர்வு நீதிமன்றம் அறிவித்தது.
அதைச் சுட்டிக்காட்டி சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயுடன் இந்தியா வந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவைக் கைதுசெய்யவேண்டும் என்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை ஏதும் எடுக்கப்படும் முன் இலங்கை திரும்பிய டக்ளஸ், தான் தேடப்படும் குற்றவாளி என்ற அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
தனது தீர்ப்பில் நீதிபதி அக்பர் அலி, "சூளைமேடு வழ்க்கில் டக்ளஸ் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற உத்திரவு வெளியிடப்பட்டபோது, அவர் இந்தியாவில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, தேடப்படும் குற்றவாளியாக டக்ளஸ் தேவானந்தாவைக் கருத அவசியமில்லை. ஆனால் வழக்கு தொடர்கிற நிலையில் டக்ளஸ் கைது வாரண்ட்டைத் திரும்பப் பெறச்சொல்லி அமர்வு நீதிமன்றத்தை அணுகவேண்டும், முன் ஜாமீனுக்கு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்" எனத் தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment