Sep 15, 2010

நிபுணர் குழு பான்கி மூனை சந்திக்கவுள்ளது



இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இங்கே தொடர்க...

சிறைகளிலுள்ள முதியோர், சிறுவரை விடுவிக்க நடவடிக்கை ஜனாதிபதி பணிப்புரை


சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவி க்கும் சிறுவர் மற்றும் முதியவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சிறுவர் மற்றும் முதியோரை விடுதலை செய்யும் வகையில் சிபாரிசினை தமக்கு முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டியூ. குணசேகரவிற்கு உத்தரவிட்டார்.

நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி மூலமாக ஐந்து சிறைக் கைதிகளை விடுதலை செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அமைச்சர் பசில் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியன இன்று நடைபெறுகின்றன.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறுகின்ற இந்த கூட்டத்திற்கு வடமாகாண ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமை வகிக்கவுள்ளார்.

வட மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி மற்றும் யாழ். மாவட்ட எம்.பிக்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் இதுவாகும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

அபிவிருத்தியில் சகல இனங்களுக்கும் வாய்ப்பு; பயங்கரவாதம் எதிர்காலத்தில் தலைதூக்காது கிளிநொச்சி அபிவிருத்தித் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் நாமல் ராஜபக

நாட்டில் அனைத்து இன மக்களும் சமமான வகையில் பயன் பெறும் துரித அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் பயங்கரவாதம் ஒருபோதும் தலைகாட்ட முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சியில் கூறினார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடன் கிளிநொச்சி பிரதேச மக்களின் சுக துக்கங்கள் மற்றும் எதிர்கால தேவைகளைக் கண்டறிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்தினம் (13) கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்.

நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (13) காலை கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்படவுள்ள டிரைஸ்டார் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டியதுடன் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்தனர். அதனையடுத்து கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களைச் சீரமைக்கும் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கல்மடுவில் உள்ள வில்லுக்குளத்தில் இடம்பெற்றது. அங்கு பிரதேசத்தின் இளைஞர் சங்கங்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற சிரமதான நிகழ்வுகளில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

அங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:-

அன்று யுத்தத்துக்கும் துப்பாக்கிக்கும் பழகிப்போன இளைஞர்களை இன்று தொழில் பயிற்சிகளுக்கு பயிற்றுவிக்க முடிகிறது. இதனால் நாட்டுக்கும் தனிப்பட்ட ரீதியிலும் அபிவிருத்தி கிடைக்கிறது. பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்ட அல்லது இடை நடுவில் கைவிட்ட இப் பிரதேசத்தை சேர்ந்த அனைத்து இளைஞர், யுவதிகளுக்கும் அவர்கள் மிகவும் விரும்பும், மற்றும் திறமை காட்டும் தொழிற்துறையில் ஈடுபடுவதற்கு தேவையான ஆரம்ப பயிற்சியை வழங்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.

பயங்கரவாதம் இந்த நாட்டுக்கு இல்லாமற் செய்தவற்றை திரும்பப் பெற இந்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளையும் சிறுவர்களுக்கு கல்வியையும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தொழில்களையும் உருவாக்கிக் கொடுப்பது அவசியமாகும். இதற்கான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேசங்களின் குறைபாடுகள் மற்றும் நிறைவேற்றப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக முன்னேற்றக் கூட்டத்தை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு மாதமும் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ எம். பி. குறிப்பிட்டார்.

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அலுத் கமகே உரையாற்றும்போது இளைஞர் யுவதிகளிடம் உள்ள உண்மையான திறமைகளை கண்டறிந்து அவற்றை வளர்ப்பதற்கு உதவுவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார, ஸ்ரீரங்கா, உதித லொக்குபண்டார, கணகஹேரத், செஹான் சேமசிங்க மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

நகரபிதாவின் செயலை ஆட்சேபித்து வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மைதானத்தில் சத்தியாக்கிரகம்


வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தை நகரசபைத் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைத்ததையடுத்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் மேற்படி சனநாயக விரோதச் செயலை கண்டிப்பதாகத் தெரிவித்து அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கொளுத்தும் வெய்யிலில் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு உறுப்பினர்கள் அமைதியான முறையில் மைதானத்தின் நடுவில் அமர்ந்திருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தரதன் உள்ளிட்ட உறுப் பினர்களான எஸ். சுரேந்திரன், எஸ். சிவகுமார், இ. கனகையா, புளொட் உறுப்பினர்களான எதிர்க்கட்சி தலைவர் ரி. லிங்கநாதன், சு. குமாரசாமி, பார்த்திபன், பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜயசேகர, அப்துல்பாரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல். முனாபர் ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து கட்சி பேதமற்ற முறையில் தாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர்.
மேலும் இங்கே தொடர்க...

சணச அபிவிருத்தி வங்கி கிளிநொச்சியில் திறப்பு

சணச அபிவிருத்தி வங்கியின் புதிய கிளையொன்று நேற்று 14ம் திகதி கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வங்கியின் கிளையை இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியுமான நாமல் ராஜபக்ஷ நேற்றுக் காலை 8.30 மணிக்குத் திறந்து வைத்தார்.

கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, குறிப்பாக விவசாய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான விசேட கடன் வசதி என்பன இக்கிளை ஊடாகச் செய்து கொடுக்க எதிர்பார்ப்பதாக வங்கியின் தலைவர் கலாநிதி பி. ஏ. கிரிவந்தெனிய கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

சம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அப்பாவிகளே பாதிப்புற்றனர்; கிளிநொச்சியில் ரங்கா எம்.பி.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

அப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக அழிவுற்று ள்ள கிளிநொச்சி உட்பட்ட வட பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மீளக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்திருக்கின்றனரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர் என்றும் அவர் கூறினார். ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள புதிய இளம் எம்.பி.க்கள் குழுவில் எம்.பி.ஜே. ஸ்ரீரங்காவும் இடம்பெற்றுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

‘30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தென் பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்று இந்த மக்களின் தேவைகளை கண்டறிவது மிகவும் சிறப்பான உதாரணம் ஆகும். எப்போதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கிய தேவைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகள் அவசியமானவை.

யுத்தத்தால் சீரழிந்து போன பிரதேசங்களில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களே. அவர்களுக்கு உதவவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் அப்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வந்தனர். தமது பிள்ளைகளைப் போலவே மற்றோரின் பிள்ளைகளையும் கருதுவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

30 வருட காலம் துன்பங்களை அனுபவித்த மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் மக்களின் கஷ்டங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கடமையாகும். அக்கஷ்டங்களை அப்பிரதிநிதிகள் நேரில் கண்டறியவும் வேண்டும்.

முப்பது வருட கால பயங்கரவாதத்தினால் இழந்தவற்றை மீண்டும் ஒரே நாளிலோ 24 மணி நேரத்திலோ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்க காலம் செல்லும். எனினும் அதற்கான ஆரம்பம் இப்போது ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

நாமல் ராஜபக்ஷ மற்றும் இங்கு வருகை தந்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. எனினும், முப்பது வருடங்கள் துன்பமுற்ற மக்களுக்கான தமது கடமைகளை நிறைவேற்றவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் இதனை உண்மையிலேயே செய்ய வேண்டியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளே.

ஆனால் அவர்கள் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஐந்து வருடங்களுக்கொருமுறை மக்களை ஞாபகப்படுத்தும் முறைமையை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சந்திரகுமார, உதித லொகுபண்டார, கணக ஹேரத், செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கே தொடர்க...