சிறிலங்காவில் சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வு தற்போது தேவைப்படவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது. விடுதலைப்புலிகளுடன் சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில், இணக்கமும், போர்நிறுத்த ஒப்பந்தமும் செய்து கொண்டிருந்த ஐதேகட்சி, இப்போது ஆயுதம் தரித்த போராளிகள் இல்லாததால் பிராந்தியங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிபிசின் சிங்களச் சேவைக்கு ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அளித்த செவ்வியியொன்றின்போதே இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இத தொடர்பில் மேலும் அறிகையில்; தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பதிலும் பார்க்க வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் அன்றாட விடயங்களுக்கு தீர்வுகாண்பதே இப்போது அவசிய தேவை. ஆயினும் மாகாண சபைகளை உருவாக்குவதற்கு வழிவகுத்த 13 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கோ அல்லது திருத்துவதற்கோ ஐ.தே.க. ஆதரவளிக்கமாட்டாது.
அவர் அச்செவ்வியில் மேலும், 13 ஆவது திருத்தமானது இலங்கையின் அரசியலமைப்பின் ஓர் அங்கமாகவுள்ளது. அதற்கு நாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம். 13 ஆவது திருத்தம் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதும், இதுவரை அத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தற்போது இராணுவம் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின்னர் காலம் மாறிவிட்டதாகவும் ஆதலால் அத்தகைய அரசியல் தீர்வுக்கான தேவை இல்லையென தெரிவித்துள்ளதாகவும் அறியப்படுகிறது.
சிறிலங்காவில் பெரும்பாண்மைக் கட்சிகள் காலத்திற்குக் காலம் மாறிமாறித் தமிழ்மக்கள் பிரச்சனையில் பாதகமான முடிவுகளை எடுத்து வந்தனர். அதனால் எழுந்த பாரிய அழிவுகள் மொத்த நாட்டினைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியதை அனைவரும் நேரடியாகச் சந்தித்திருந்த போதும், அதற்குரிய சரியான தீர்வினைக் கண்டுகொள்ளாது காலம் கடத்துவதிலேயே கருத்தாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளுடன் இணக்க ஒப்பந்தம் செய்திருந்த ஐதேகட்சி, அந்த வேளையிலேயே ஓப்பந்தத்திற்கு விரோதமாகச் செயற்படுவதாகவும், செயலற்ற பேச்சுவாரத்தைகள் மூலம், காலத்தை இழுத்தடிப்பதாகவும், விடுதலைப்புலிகள் குற்றச் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...