Oct 24, 2010

சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மதத் தலைவர்கள் கோரிக்கை



ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு மதத் தலைவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுதக் கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக சரத் பொன்சேகாவிற்கு 30 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகா விவகாரத்தில் தவறு இழைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தவறை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோலமுன சோமவன்ச தேரர், பெட்ரிக் பெர்னாண்டோ பிதா, மௌவி அல் ஹாஜ் ஹசன் காசீம் மற்றும் விக்னேஷ்வர் சர்மா ஆகிய மதத் தலைவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

அரசியல் தீர்வை தராமல் ஜனாதிபதி சொல்லும் 'அம்புலி மாமா" கதைத்தான் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை: மனோ

அரசியல் தீர்வை தராமல் தவிர்ப்பதற்கு ஜனாதிபதி சொல்லும் 'அம்புலி மாமா" கதைத்தான் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை என்பதாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக அரசியல் தீர்வு தரமுடியாதுள்ளது என ஜனாதிபதி கூறியது தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

போருக்கு முன்னரும், போரின் போதும் பயங்கரவாதத்தை காரணங்காட்டி அரசியல் தீர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று போர் முடிந்த பின்னர் தமிழ் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது என்ற காரணத்தை கண்டுபிடித்து காட்டி அரசியல் தீர்வு மறுக்கப்படுகின்றது. இது அம்புலி மாமா புத்தகத்தில் வரும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் விக்ரமாதித்தன் கதையை நினைவுப்படுத்துகின்றது.

ஜனாதிபதியே நியமித்த சர்வக்கட்சி மாநாட்டின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பலமாதங்கள் ஆகிவிட்டன. அதேபோல் இன்றைய அரசியலமைப்பில் 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் பல்லாண்டுகளாக இழுத்தடிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மையை காரணங்காட்டுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

ஜனாதிபதியின் இந்த கருத்திற்கு இந்தியாவிலும் எதிரொலி கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக முதல்வரும், இந்திய நடுவண் அரசு தலைவர்களும் அரசியல் தீர்வை வலியுறுத்துவது தொடர்பில் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் அவசர அவசரமாக விமர்சனம் செய்கின்றார்கள். ஆனால் இந்த அக்கறையும், அவசரமும் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் சர்வக்கட்சி உடன்பாடுகளையும் 13வது திருத்தத்தையும் அமுல்படுத்துவதில் அக்கறை காட்டப்படவில்லை.

போர் காலகட்டத்தில் இலங்கை அரசிற்கு உறுதுணையாக தமிழக அரசும், இந்திய அரசும் இருந்தது அனைவரும் அறிந்த பகிரங்க உண்மையாகும். இந்த துணையிருப்பிற்கு நிபந்தனையாக அரசியல் தீர்வை போர் முடிந்தவுடன் நடைமுறை படுத்துவோம் என இலங்கை அரசு உறுதியளித்திருந்ததும் பகிரங்க உண்மையாகும். ஜனாதிபதி 13வது திருத்தத்திற்கு மேலதிகமாக தீர்வை பெற்றுத்தருவதாக இந்திய ஊடகங்களுக்கு பலமுறை கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் நண்பரான பிரபல இந்திய ஊடகவியலாளர் இந்து ராம் தனது பத்திரிக்கையில் 13ற்கு மேற்செல்லும் தீர்வு பற்றி பலமுறை எழுதியிருந்தார். இன்று அதே இந்து ராம் தனது பத்திரிக்கையில் அரசியல் தீர்வில் தொடர்பிலான இலங்கை அரசின் அக்கறையின்மை சம்பந்தமாக எழுதுமளவிற்கு நிலைமை முற்றியுள்ளது.

எனவே இன்று தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை பற்றி ஜனாதிபதி கருத்து தெரிவிப்பது வேடிக்கையானதாகும். அப்படியே பார்த்தாலும்கூட வடகிழக்கிலே தமிழ் கட்சிகள் மத்தியில் அரசாங்கம் நினைப்பதைபோல் பாரிய ஒற்றுமையின்மை கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை பெற்ற பல கட்சிகளின் கூட்டமைப்பாக இருக்கின்றது. அதேவேளையில் மூன்று ஆசனங்களை பெற்ற ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்துள்ள இன்னும் பல கட்சிகள் தமிழ் கட்சிகளின் அரங்கமாக செயற்படுகின்றன. ஆக இந்த இரண்டு அணிகள் தான் வடகிழக்கில் காணப்படுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயும் அரசியல் தீர்வு தொடர்பாக பாரிய வேறுபாடுகள் இருப்பதாக தோன்றவில்லை. குறிப்பாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது சம்பந்தமாக ஒத்த கருத்து நிலவுவதாகவே நாம் நம்புகின்றோம்.

எனவே அரசியல் தீர்வு கொண்டுவருவதில் தமக்கு உடன்பாடு இருக்குமானால் அதை அரசாங்கம் உடனடியாக அறிவிக்கவேண்டும். அரசியல் தீர்வை வழங்குவதற்கு உடன்பாடு இல்லாவிட்டால், அதையும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உலகம் அறிந்துகொள்வதற்கு அது வழியை ஏற்படுத்தும்.
மேலும் இங்கே தொடர்க...

இன்று ஐக்கிய நாடுகள் தினம், 65 ஆண்டுகள் பூர்த்தி

ஐக்கிய நாடுகள் தினம் இன்று சர்வதேச ரீதியாக அனுஸ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 65ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1945ஆம் ஆண்டு 50உறுப்பு நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்னர் உலக நாடுகளுக்கிடையில் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பி பொதுவான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது.

பொதுச்சபை, பாதுகாப்புச்சபை, தர்மகர்த்தா சபை, தலைமைச் செயலகம், பொருளாதார மன்றம், சர்வதேச நீதிமன்றம் ஆகிய ஆறு பிரிவுகளைக் கொண்ட இதன் முதலாவது பொதுச் செயலாளராக நோர்வே நாட்டைச் சேர்ந்த டிரிக்விலி தெரிவு செய்யப்பட்டார்.

தென்கொரியாவைச் சேர்ந்த பாங்கீ மூன்று தற்போதைய பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகின்றார். நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 199 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகில் சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அதன் இலக்கினை அடைவதில் பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கே தொடர்க...

142 இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் சிறையில் உள்ள 142 இந்திய மீனவர்களை திருப்பி அனுப்ப கராச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததான குற்றச்சாட்டில் கடந்த சில மாதங்களில் அந்நாட்டு கடலோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இந்த மீனவர்கள் மீது மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கராச்சி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. மீனவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்த நீதிமன்றம் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை சிந்து மாகாண உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது. இனி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் இந்திய அரசுக்கு தாங்கள் மீனவர்களை விடுவிக்க உள்ளது குறித்து தெரிவிப்பார்கள்.

பின்னர் அவர்கள் இந்திய மீனவர்கள்தானா என்பது இந்திய அரசு மூலம் உறுதி செய்யப்படும். அதன் பின் மீனவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்படுவர்.

முன்னதாக கராச்சி சிறையில் இருந்த 442 இந்திய மீனவர்கள் அண்மையில் தாய்நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.

அவர்களை விடுவிக்க வேண்டுமென பாகிஸ்தானில் உள்ள இரு தொண்டு நிறுவனங்கள், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தந்தன.
மேலும் இங்கே தொடர்க...

முன்னாள் புலிகள் 1000 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை: அமைச்சர்


முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை அமைச்சர் குணசேகர கூறினார்.

இது குறித்து அந் நாட்டின் மறுவாழ்வு மற்றும் சிறைத் துறை சீர்திருத்த அமைச்சர் டி.ஈ.டபிள்யூ.குணசேகர ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பயங்கரவாதச் செயல்களில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிகள் சுமார் ஆயிரம் பேர் சிறைகளில் உள்ளனர். அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடாத 304 பெண்கள் உள்பட 4,460 முன்னாள் விடுதலைப் புலிகள் விடுவிக்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 23 பெண்கள் திங்கள்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர் என்றார்.
மேலும் இங்கே தொடர்க...