Nov 7, 2010

நகை வாங்குவதுபோல் நடித்து 25 பவுன் நகை திருடிய பெண் கைது: ரகசிய கேமரா காட்டிக்கொடுத்தது




வியாசர்பாடி மார்க்கெட் அருகே “மேத்தா ஜுவல்லரி” என்ற பெயரில் நகை கடை உள்ளது. தீபாவளியையொட்டி, தங்கநகை வாங்குவதற்காக நேற்று முன்தினம் இங்கு அதிக அளவில் கூட்டம் இருந்தது. ஏராளமான பெண்கள் நகையை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பெண் தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்தார். இதை நகைக்கடை அதிபர் சம்பத்ராஜ் ரகசிய கேமரா மூலம் பார்த்தார். உடனே கடையின் கதவு மூடப்பட்டது. நகை திருடிய பெண்ணை கடை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது வியாசர்பாடி நகைக்கடையில் 9 பவுன் நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுதவிர சர்மா நகரில் உள்ள ”மகேந்திரா ஜுவல்லர்ஸ்” என்ற நகை கடையில் நகை வாங்குவதுபோல் நடித்து 5 பவுன் மாலையை மடியில் மறைத்து வைத்து திருடியதாகவும் கூறினார்.

இதுதவிர மேலும் 11 பவுன் நகை திருடியதாகவும் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் இருந்து 25 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

அயனாவரத்தை சேர்ந்த அவளது பெயர் தாட்சாயணி (37) என்பதும், நகை கடைகளில் தொடர்ந்து கைவரிசை காட்டியதாகவும் கூறினார். அவளை வியாசர்பாடி போலீசார் கைது செய்தனர்.

இதுதவிர கொடுங்கையூர் நாராயணசாமி தெருவில் வசிக்கும் சந்திரசேகர் என்ப வருடைய வீட்டிலும் 7 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. வணிக வரித்துறை அதிகாரியான இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்றபோது, யாரோ வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி உள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை டி.எச். ரோட்டைச் சேர்ந்தவர் மாலா (37). விதவைப் பெண். இவரது கணவர் ஸ்ரீதர் கடந்த ஆண்டு இறந்து போனார்.

கணவரின் நினைவிடம் கல்பாக்கத்தில் உள்ளது. நேற்று அவரது நினைவு நாள். இதையொட்டி மாலா கணவரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்தார்.

இரவில் வீடு திரும்பிய மாலா வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
மேலும் இங்கே தொடர்க...

சென்னையில் விலை ஏற்றம் ஒரு முருங்கைக்காய் 10 ரூபாய்



சென்னைக்கு தினமும் ஒரு லாரி அளவுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது சீசன் இல்லாத காரணத்தால் முருங்கைக்காய் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மழை காலமாக இருப்பதால் பூக்கள் உதிர்ந்து முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளதால் தற்போது குஜராத் மாநிலத்தில் இருந்து தான் கோயம்பேடுக்கு முருங்கைக்காய் வருகிறது.

தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு முருங்கைக்காய் 6 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோ 60 ரூபாய்க்கு கிடைத்தது.

ஆனால் இன்று முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கு விலை உயர்ந்து விட்டது. இதனால் ஒரு சிறிய முருங்கைக்காய் 10 ரூபாய்க்கும், நீட்ட முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல் தக்காளி கிலோ ரூ.16-க்கும், கேரட் ரூ.40-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும் விலை உயர்ந்துள்ளது. முள்ளங்கி, நூல் கோல் இன்று மார்க்கெட்டில் இல்லை.

கடந்த 2 நாட்களாக லீவு நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று கூட்டமே இல்லை. காய்கறி வாங்க ஆள் இல்லாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

காசி மேட்டில் கழுத்தை அறுத்து ரவுடி படுகொலை; தீபாவளி விருந்துக்கு அழைத்து இன்னொரு ரவுடி வெறிச்செயல்


புளியந்தோப்பு பி.கே. காலனியில் வசித்து வந்தவர் துர்கைவேல் (வயது 28) பிரபல ரவுடி. இவர் மீது எண்ணூர், புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று மாலையில் காசிமேடு மீன்பிடித்துறை முகம் கடற்கரையில் துர்கைவேல் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசிங் விரைந்து சென்று துர்கைவேலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

கொலையுண்ட துர்கைவேல் இதற்கு முன்பு காசி மேடு காசிமாநகரில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி பவுடர் ரவியுடன் இவருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இதன் பின்னர் துர்கைவேல் புளியந்தோப்பில் குடியேறினார். ஆனால் பவுடர் ரவி, துர்கைவேல் மீதான பகையை மறக்காமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு நண்பர் மூலமாக துர்கைவேலை தீபாவளி விருந்துக்காக புவடர் ரவி அழைத்துள்ளார்.

இதை நம்பி துர்கைவேல் காசிமேடு மீன்பிடிதுறை முகத்துக்கு சென்றார். அங்கு வைத்து புவுடர் ரவியும் அவனது கூட்டாளிகளும் துர்கை வேலை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர் கழுத்தை அறுத்து அவரை கொலை செய்து கடலில் வீசியுள்ளனர்.

புவுடர் ரவியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளிகளான தேசப்பன், இன்னொரு தேசப்பன், கார்த்திக் 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட பவுடர் ரவி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கும் துர்கைவேலுக்கும் தகராறு இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு எனது படகை துளை போட்டு கடலில் மூழ்கடித்து விட்டான். இதனால் அவன் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது தீர்த்து கட்டி விட வேண்டும் என்று திட்டமிட்டேன். எங்கள் திட்டப்படி நண்பர்கள் துர்கைவேலை அழைத்து வந்தனர். மது விருந்து கொடுத்து போதையில் இருந்த போது கழுத்தை அறுத்து கொன்றோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

தேசத் துரோக வழக்கு: முஷாரபுக்கு நோட்டீஸ்

முன்னாள் அதிபர் முஷாரபுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு லாகூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2007-ம் ஆண்டு முஷாரப், நாட்டில் நெருக்கடிநிலையை பிரகடனப்படுத்தியது தேசத் துரோகம் என்று கூறி லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் முஷாரப், இந்த வழக்கு விசாரணையில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இதை எதிர்த்து ஒருவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தில் முஷாரப் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடுமாறு மனுதாரர் கோயிருந்தார். இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், முஷாரபுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
மேலும் இங்கே தொடர்க...

மழைக்காலம் முடிந்ததும் இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்: ப.சிதம்பரம்

போரினால் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டும் பணிகள் மழைக்காலம் முடிந்ததும் தொடங்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை காலையில் ப.சிதம்பரம் சந்தித்தார். சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியது:

இலங்கை அதிபர் ராஜபட்ச தில்லி வந்தபோது, அவருடன் விவாதிக்கப்பட்ட விஷயங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்த 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்கிற திட்டம் முன்னேற்றத்தில் உள்ளது.

விரைவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று ராஜபட்சவிடம் நாங்கள் வற்புறுத்தியிருக்கிறோம்.

மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் தொடங்கும் என்று அவர்கள் வாக்குறுதி தந்துள்ளனர்.

மீனவர்கள் கைது: இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இந்த ஆண்டில் ஒரு மீனவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர புதிதாக யாராவது கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை.

ஒபாமா வருகை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு முழுப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவரது வருகையால் இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுமா என்பதை அவரது பயணம் முடிந்த பிறகுதான் கூற முடியும். இந்திய-அமெரிக்க உறவு சீராக இருக்கிறது.

இன்னும் வலுப்படுமா என்பதை பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் கூற முடியும் என்றார் ப.சிதம்பரம்.
மேலும் இங்கே தொடர்க...

பாக்., அதிபர் சர்தாரி இலங்கை பயணம்


கொழும்பு : பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாதம் இலங்கை செல்கிறார். பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அரசு முறை பயணமாக இம்மாத இறுதியில் இலங்கைக்கு செல்கிறார். அவருடன், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் இலங்கை செல்கின்றனர்.

அங்கு, பாக்., அதிபர் சர்தாரி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது, பாதுகாப்பு, வணிகம் குறித்த பேச்சு வார்த்தைகள் இடம்பெறும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தெரிகிறது. இஸ்லாமாபாத் - கொழும்பு இடையிலான பயணம் தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாகவும், பயணம் இறுதி செய்யப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நேபாள மாவோயிஸ்டுகளிடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி


காத்மாண்டு : இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் நக்சலைட்களுக்கு, நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளிக்கும் விவரம் தெரியவந்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவும் உதவி வருகிறது.

சமீப நாட்களாக இந்தியாவில் நக்சலைட் வன்முறைகள் அதிகரித்துள்ளன. அவர்களால் உள்நாட்டு பாதுகாப்பு பெரும் பிரச்னையாகி உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் செயல்படும் நக்சலைட்களுக்கு நேபாள மாவோயிஸ்டுகள் பயிற்சியளித்து வரும் விவரம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மற்றும் இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளில் ஒரு பிரிவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)க்கும் உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்தும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களையும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரும் கடிதத்தையும் நேபாள அரசிடம் இந்தியா கொடுத்துள்ளது.

இக்கடிதம் மற்றும் ஆவணங்களை, நேபாளத்திற்கான இந்திய தூதர் ராகேஷ் சூத், நேபாள உள்துறை அமைச்சர் பீம் ரவால் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஜாதா கொய்ராலா ஆகியோரை சில நாட்களுக்கு முன் சந்தித்துக் கொடுத்துள்ளார்.இந்திய தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில், நேபாள மக்கள் விடுதலை ராணுவத்திடம் இந்திய நக்சலைட்கள் பயிற்சி பெறுவது தொடர்பாக உளவுத்துறையினர் சேகரித்துள்ள விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பயிற்சிக்கு பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உதவுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதங்கள் மற்றும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இந்தியாவில் செயல்படும் நக்சலைட் அமைப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என, நேபாள மாவோயிஸ்டுகள் இதுவரை கூறி வந்தனர். அது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் இங்கே தொடர்க...