Dec 6, 2010

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து

இலங்கைக்கான 3 நாள் உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எலஸ்டேயார் பர்ட்டின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் டொமினிக் வில்லியம் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நாளை செவ்வாய்க் கிழமை ஆரம்பிக்கவிருந்தார்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் அழுத்தங்கள் காரணமாகவே அவர் இலங்கை விஜயத்தை இரத்துச் செய்துள்ளார் என டொமினிக் வில்லியம் மேலும் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

கடற்படையினரால் தாக்கப்பட்ட பஸ் சாரதி மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

மடுவில் இருந்து மன்னாருக்கு பயணிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த தனியார் பஸ் சாரதி ஒருவர் கடற்படைக் குழுவினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆரோக்கியம் தவப்பிரகாசம் (வயது-41) என்பவரையே கடற்படைக் குழுவினர் தாக்கியுள்ளனர். முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியில் வைத்து கடற்படை குழுவினரால் இவர் வழிமறிக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார். பயணிகள் இவரைக் காப்பாற்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தாக்கதலுக்குள்ளான சாரதி ஆ.தவப்பிரகாசம் கருத்துத் தெரிவிக்கையில்,

"மடுத்திருத்தலப் பகுதியில் இருந்து நேற்று மாலை 2.15மணியளவில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தோம். இதன் போது முருங்கன் இசைமாளத்தாழ்வு பகுதியூடாக வந்து கொண்டிருந்த போது பஸ்ஸுக்குப் பின்புறமாக கடற்படையினரின் டிரக் ரக வாகனம் வந்துகொண்டிருந்தது. டிரக் வண்டி பஸ்ஸை முந்திக்கொண்டு செல்ல வழிவிடப்படாததால், சுமார் 5 கடற்படை வீரர்கள் என்னைத் தாக்கினர்" என்றார்.

இது தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சாரதி தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளாப்படாவிட்டால் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கே தொடர்க...

டெங்கு நோயை பரப்பும் அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: மைத்திரிபால சிறிசேன

டெங்கு நோய் பரவுவதற்கு வழியேற்படுத்தும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

''இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் பரவுவதற்கு 90 சதவீதம் அரச நிறுவனங்கள் காரணமாக அமைந்துள்ளன என தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களின் சுற்றுச் சூழலை 2 வாரகாலத்திற்குள் சுத்தப்படுத்தாவிடில் ஊடகங்களின் மூலம் பெயர்கள் வெளியிடப்படும்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 13 பாடசாலைகள் டெங்கு நோயை பரப்பக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது" என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 760 கனமீற்றர் நீர்வெளியேற்றம்

பல வருடங்களின் பின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இன்று காலை முதல் ஒரு வினாடிக்கு 760 கனமீற்றர் நீர்வெளியேற்றப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர் தேக்கங்கள் அனைத்தும்; நிறைந்துள்ளன. கண்டி விக்டோரியா நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள விக்டோரியா நீர் தேக்கத்தை பார்வையிடுவதற்காக பெரும் தொகையான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

நீருக்கடியில் சுவாசிக்க புதிய நீச்சல் உடை : அமெரிக்காவில் கண்டுபிடிப்பு


லண்டன் :ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா டைவிங்' வீரர்களும், மீன்களைப் போல் சுவாசிக்கும் வகையில் புதிய நீச்சல் உடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் புதைபொருட்கள் பற்றி, "ஸ்கூபா' வீரர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நீருக்கடியில் சுவாசிப்பதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால், ஆய்வுப் பணிகளை முழுமனதாக நடத்த முடியாது. இதை கருத்தில் கொண்டு, "ஸ்கூபா' வீரர்களும், நீருக்கடியில் சுவாசிக்கும் விதமாக, புதிய நீச்சல் உடையை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அர்னால்டு லான்ட் கூறியதாவது: ஆழ்கடல் செல்லும், "ஸ்கூபா' வீரர்கள் சுவாசிப்பதற்காக, இந்த நீச்சல் உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, திரவ நிலையில் உள்ள சிறப்பு கரைசல் (பெர்ப்ளூரோ கார்பன்) பயன்படுகிறது. இந்த கரைசலில் பெருமளவு ஆக்சிஜன் கலந்திருக்கும். இதனை அணிந்துள்ள ஒருவரின் காது, மூக்கு மற்றும் நுரையீரல் பகுதிகளில் உள்ள ஆக்சிஜன் வெளியேறாமல் கட்டுப்படுத்தப்படும். சுவாசிக்கும்போது, ஆக்சிஜன் நிரம்பிய குமிழ்கள் திரவ நிலையில், மூக்கு வழியாக சென்று அவரது நுரையீரல் பகுதியை அடைகிறது. நுரையீரல் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு மூக்கு வழியாக வெளியேறாமல், ரத்தத்தில் கலந்து, கால்களில் உள்ள "பெமோரல்' நரம்புகளை வேகமாக இயக்க உதவும். சாதாரண காற்றை சுவாசிப்பது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படும். இவ்வாறு அர்னால்டு லான்ட் கூறினார்.
மேலும் இங்கே தொடர்க...

பொன்சேகாவுக்கு சலுகை ஜெயிலர் அதிரடி சஸ்பெண்ட்


கொழும்பு : இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை, செய்தியாளர்களுடன் பேச அனுமதித்த ஜெயிலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. இவர், தளபதியாக இருந்த போது, ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், இவருக்கு 30 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்ற வழக்குகள் தொடர்பான விசாரணைக்காக, பொன்சேகா சிறையில் இருந்து அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். சமீபத்தில் ஒரு நாள், இதுபோல் அவர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் பேச, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பொன்சேகாவை, செய்தியாளர்களுக்கு பேச அனுமதி அளித்த ஜெயிலர் டுமிண்டா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொன்சேகாவை அழைத்துச் சென்ற சிறைத் துறை வாகனத்தின் டிரைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கே தொடர்க...

இலங்கை - பிரிட்டன் இடையே கசப்புணர்வு அதிகரித்தது


கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் பிரிட்டன் சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை உயரதிகாரி, தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, கடந்த வாரம் பிரிட்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, லண்டன் விமான நிலையம் முன் திரண்ட ஏராளமான தமிழர்கள், ராஜபக்ஷேவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ராஜபக்ஷேவுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜபக்ஷேயின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

பிரிட்டனில் ராஜபக்ஷேவுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 3ம் தேதி, கொழும்பில் உள்ள பிரிட்டன் தூதரகம் முன், அரசு ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கை வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சா தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்படுவதாகக் கூறி, அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த சம்பவங்கள் காரணமாக, பிரிட்டன் - இலங்கை நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலஸ்டார் பட், தனது இலங்கை சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்த வாரத்தில் அவர் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்வதாக இருந்தது.

இதுகுறித்து இலங்கையில் உள்ள பிரிட்டன் தூதரக இணையதளத்தில், "வெளியுறவுத் துறை செயலரின் சுற்றுப் பயண தேதியை மாற்றுவது குறித்து கடந்த சில வாரங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே தொடர்க...