தீவிரம் "நீர்மூழ்கிக் கப்பல்களை குறி பார்த்து தாக்கும் போர் விமானங்கள் அடுத்தாண்டு முதல் தைவான் ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படும்' என்று அந்நாட்டு பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவுக்கு எதிரான தைவானின் நடவடிக்கையாக இதை ஆசிய நாடுகள் கருதுகின்றன. தென் சீன கடல் பகுதியில், சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை மற்றும் ராணுவத்தை அதிநவீனமாக்கும் அதன் செயல்பாடுகள், கிழக்காசிய நாடுகள் மத்தியில் பீதியை கிளப்பி வருகின்றன. இந்நிலையில், சீனாவிடம் இருந்து முழுமையாக விடுபடத் துடிக்கும் தைவான் நாட்டுக்கு, நீர்மூழ்கிக் கப்பலை குறி பார்த்து தாக்கும் பி-3சி ரக போர் விமானங்களை விற்பதாக அமெரிக்கா ஒப்பந்தம் செய்தது. அதன்படி, அடுத்தாண்டில் 12 பி-3சி ரக போர் விமானங்களில் ஒன்றை அமெரிக்கா, தைவானுக்கு வழங்கும். இது, தற்போது தைவானில் செயல்பாட்டில் இருக்கும் எஸ்-2டி விமானங்களுக்கு மாற்றாக இருக்கும். கடந்த 1949ல் சீனாவில் நிலவி வந்த ஷியாங்கே ஷேக் தலைமையிலான குவாமின்டாங் கட்சியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக மா சே துங் நடத்திய புரட்சியின் போது, ஷேக் உட்பட அக்கட்சியின் பெரும்பான்மையோர் தைவானில் தஞ்சம் அடைந்தனர். ஷேக், தைவானில் தனது ஆட்சியை உருவாக்கினார். அமெரிக்கா அதற்கு ஆதரவு தெரிவித்தது. அது முதல் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனியாக செயல்பட்டு வருகிறது. மாவோவுக்குப் பின் வந்த டெங் ஷியாவ்ப்பிங்கும், அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் பலரும் தைவான், சீனாவுடன் சேர வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர். 1980ம் ஆண்டுகளில் தைவானில் ஜனநாயக ஆட்சி உருவானது. கடந்த 2005ல், சீன ராணுவத் தலைவராக ஹூ ஜிண்டாவோ பொறுப்பேற்ற போது, தைவான் சீனாவிடம் இருந்து விடுதலையாகப் போவதாக எதிர்காலத்தில் பிரகடனம் செய்வதைத் தடுக்கும் வகையில், "பிரிவினைக்கு எதிரான சட்டம்' ஒன்றை கொண்டு வந்தார். குவாமின்டாங் கட்சியின் மாயிங் ஜியோ அதிபராக பொறுப்பேற்ற பின், இரு தரப்பு உறவையும் மேம்படுத்தி வந்தார். 2008, டிசம்பரில் 60 ஆண்டு கால பகைமையை மறக்கும் வண்ணம், சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து துவங்கியது. ஆனால், 2009ல் சீனாவின் வடக்கு மற்றும் தென்பகுதியில் உள்ள முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்கக் கூடிய மூன்று ஏவுகணைகளை தைவான் பரிசோதித்து, இரு தரப்பிலும் மீண்டும் பகைமையை வளர்த்தது. இந்நிலையில் அமெரிக்கா, சீனாவின் ஓர் அங்கம் தைவான் என்பதை ஏற்றுக் கொண்டாலும், தைவான் மீது அன்னிய நாட்டு தாக்குதல் நேரும் பட்சத்தில் தான் உதவி புரிவதாக ஓட்டளித்து ஆயுதங்களை வாரி வழங்கியது. தைவான் தனது பகுதி என்று வலியுறுத்தி வரும் சீனா, தைவானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு காரணமாக, அதன் மீது போர் தொடுத்து தன்னுடன் இணைப்பதற்கு தயங்கி வருகிறது. தைவானும் இந்த சாக்கில் ஆயுதங்களை குவித்து வருகிறது.
மேலும் இங்கே தொடர்க...