Feb 7, 2011

நாட்டில் தொடர்ச்சியான மழை: 12,43,478 பேர் பாதிப்பு; 2,50,501 மக்கள் முகாமில்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 18 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 821 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 43 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 67 ஆயிரத்து 508 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 501 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 689 முகாம்களில் தங்கியுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். நாடளாவிய ரீதியில் 1161 வீடுகள் முழுமையாகவும் 8412 வீடுகள் பகுதியளவிலும் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது

திருகோணமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களை சேர்ந்த மூன்று இலட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்து 220 குடும்பங்களை சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் கந்தளாய், மூதூர், வெருகல், தம்பலகாமம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 40 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர். கோரளைப்பற்று வடக்கு, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, மண்முனை பற்று, காத்தான்குடி, எருவில்பற்று, போரதீவு பற்று, ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்கள் இந்த மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களை சேர்ந்த இரண்டு இலட்சத்து 82 ஆயிரத்து 685 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6558 குடும்பங்களை சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் சம்மாந்துரை, நிந்தவூர், கல்முனை, இறக்காமம், சாய்ந்த மருது, காரைதீவு, ஆலையடி வேம்பு, திருக்கோவில் உள்ளிட்ட பல பிரதேசங்கள் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டத்தில் 478 குடுபங்களை சேர்ந்த 1949 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 350 குடும்பங்களை சேர்ந்த 1450 பேர் ஏழு முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இம்மாவட்டத்தில் 11 முகாம்களில் 240 குடும்பங்களை சேர்ந்த 808 பேர் தங்கியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5247 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாம்களில் தங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 1007 குடும்பங்களை சேர்ந்த 3769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 தற்காலிக முகாம்களில் 3467 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை வெள்ளப்பெருக்கு காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களை சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6613 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அத்துடன் இந்த மாவட்டத்தில் 697 வீடுகள் முழுமையாகவும் 3224 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 351 குடும்பங்களை சேர்ந்த 1312 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 437 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 202 குடுங்களை சேர்ந்த 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 249 குடும்பங்களை சேர்ந்த 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 முகாம்களில் 764 பேர் தங்கியுள்ளனர்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் 3351 குடும்பங்களை சேர்ந்த 12158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் மடு நானட்டான் மாந்தை மேற்கு மன்னார் முசலி ஆகிய பகுதிகள் வெள்ளம் காரணமக்ஷிக பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 451 குடும்பங்களை சேர்ந்த 59 ஆயிரத்து 977 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 616 குடும்பங்களை சேர்ந்த 2048 பேர் 4 முகாம்களில் தங்கியுள்ளனர். இந்த மாவட்டத்தில் துணுக்காய் , ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 3711 குடும்பங்களை சேர்ந்த 14827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 குடும்பங்களை சேர்ந்த 430 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment