Sep 21, 2010

ஹெலிகாப்டர் விழுந்ததில் 9 பேர் பலி

காபூல்:ஆப்கனில் நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் ஒன்பது பேர் பலியாயினர். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.ஆப்கனில் அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2001ல் ஆட்சியை இழந்த தலிபான்கள், காந்தகார் உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி கொண்டு வெளிநாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கனில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 529 வெளிநாட்டு வீரர்கள் தலிபான்களின் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே நேற்று, சாபுல் மாகாணத்தில் உள்ள டெய்சோபன் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த நேட்டோ படைகளின் ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்தது. இதில் ஒன்பது நேட்டோ வீரர்கள் பலியாயினர். ஒரு அமெரிக்கர், ஒரு ஆப்கன் நாட்டவர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் விபத்துக்குள்ளானதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
மேலும் இங்கே தொடர்க...

கணக்கு தாருங்கள்: பாக்., எம்.பி.,க்கள் கேள்வி

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் உளவு அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை தெரிவிக்க வேண்டும் என, அந்நாட்டு எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ( நவாஸ் பிரிவு) எம்.பி., சவுத்ரி நிசார் அலிகான் தலைமையில் பொதுகணக்கு குழு நேற்று முன்தினம் கூடி விவாதித்தது. பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ராணுவ ஆட்சி காலத்தில் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது துணை மானிய கோரிக்கையின் பேரில் 40 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

"பாகிஸ்தான் உளவு அமைப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அரசின் கீழ் இயங்குகிறதா என்பது தெரியவில்லை. இந்த அமைப்பு அரசியல்வாதிகளின் பேச்சுக்களை ஒட்டுக் கேட்கிறது. பத்திரிகையாளர்களை கைது செய்து துன்புறுத்துகிறது. ராணுவத்துக்கு உளவு அமைப்பின் சேவை தேவை. ஆனால், அரசியலில் இந்த அமைப்பின் தலையீடு அதிகமாக உள்ளது. இந்த அமைப்பின் வரவு, செலவு கணக்குகளை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்' என, பொதுகணக்கு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.,க்கள் வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் இங்கே தொடர்க...

பாகிஸ்தானுடன் எல்லா விஷயங்கள் குறித்தும் இந்தியா பேசத் தயார்: நிருபமா ராவ் பேட்டி






பாஸ்டன் : "காஷ்மீர் பிரச்னை உட்பட, அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது. ஆனால், இருதரப்பு உறவுகளையும் சீர்படுத்தும் விதத்தில், பயங்கரவாத ஒழிப்பில் போதுமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடக்க உள்ள ஐ.நா., பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிருபமா ராவ், அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:காஷ்மீர் பிரச்னை, பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவோடு சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், அப்பிரச்னை உட்பட அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என, மிகத் தெளிவாக, நம்பிக்கையுடன், வெளிப்படையாக கூறுகிறேன்.பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்கு அப்பால், பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு, தொடர்ந்து இந்தியாவை எதிர்ப்பதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளித்து, தாக்குதல் நடத்த சதித்திட்டமும் தீட்டி வருகின்றனர். இதனால் பாகிஸ்தானுடனான இந்திய உறவு ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது.
"ஒரு பெரிய தேசம், தன் அண்டை நாடுகளுடன் எப்போதும் மோதிக் கொண்டிருந்தால் அது பலவீனமடையும்' என்று, சாணக்கியர் கூறிய கருத்தும் எங்களுக்கு தெரியும்.

தன் அண்டை நாடுகளுடன் பொருளாதார ரீதியில் இணக்கமான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என, இந்தியா விரும்புகிறது. பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும். அதற்காக நெருடலான விஷயம் தவிர மற்றவைகளைப் பேச விரும்புகிறோம் என்று அர்த்தமல்ல.ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உட்பட, எல்லா விஷயங்களையும் நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம். அமைதியான சூழலில் இப்பகுதியின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்பது விருப்பம்.மும்பைத் தாக்குதல் வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் இருக்கிறது. மும்பைத் தாக்குதல் வழக்கு மிகவும் மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.ஆப்கனில், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்; அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவாக உள்ளது.இவ்வாறு நிருபமா ராவ் தெரிவித்தார்.

சீனாவுடன் எல்லை பிரச்னை : இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து நிருபமா கூறியதாவது:எல்லையைப் பொறுத்தவரை இருநாடுகளுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இப்பிரச்னையில் குறுகிய காலத்தில் எடுக்கப்படும் மிக எளிய முடிவுகள் தீர்வாகாது. இருதரப்பு உறவுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் முக்கியத் தடையாக இப்பிரச்னை மாறுவதை இரண்டு நாடுகளுமே அனுமதிக்காது. எல்லையில் தொடர்ந்து அமைதி நிலவுகிறது. இருதரப்பு உறவையும் போட்டியாக மட்டுமே பார்க்காமல், பதட்டமில்லாத அமைதியான முறையிலும் உள்ளது என்றும் பார்க்க வேண்டும்.சீனாவுடனான இந்திய உறவு, நடைமுறைக்குரியதாக இருக்குமே தவிர, ஒத்துப்போகாத முறையில் இருக்காது. ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி அல்லது பொருளாதாரத் தேவைக்கான வளங்களைத் தேடுவதில் போட்டி என இந்த உறவு இருக்குமா என்று மிகைப்படுத்த வேண்டியதில்லை.
மேலும் இங்கே தொடர்க...